Monday, February 16, 2009

இதயத்தை பாதிக்கும் உடற்பருமன்

உடற்பருமனால் இதயம் பாதிக்கப்படுகிறது என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஆனால் அதுதான் உண்மை:


உடற்பருமன் உண்டாவதற்கு முக்கியக்காரணங்கள் என்று பார்த்தால், உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடுகள், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, உணவு முறை ஆகியவையே முக்கிய இடத்தைப்பிடிக்கும். இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும்.


ஹார்மோன் மாறுபாடுகள்:


உடற்பருமன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பொதுவானது. வயது வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் உண்டாகிறது.

ஆண்களுக்கு முன்னாலும் (வயிற்றுப் பகுதி), பெண்களுக்குப் பின்னாலும் (புட்டப் பகுதி) அதிகக்கொழுப்பு சேர்கிறது.
இதுவே ஹார்மோன் மாறுபாடுகளால் உண்டானால் உடல் பருத்திருக்கும்.

சில பெண்கள் பருவவயதில் கொடி இடை... அன்ன நடை, மதிமுகம், மதுக் கிண்ணம்... இப்படி வர்ணிக்கத்தக்க வகையில் அழகாக இருப்பார்கள். முப்பத்தைந்து நாற்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டால் அவர்களை பார்க்க சகிக்காது.

பூசணிக்காய் போல உடற்பருத்து, வாத்து நடையுடன் முட்டியைப்பிடித்துக் கொண்டு நடப்பார்கள். கொஞ்ச தூரம் நடப்பதற்கே பெருமூச்சு வாங்கும். இதற்கு காரணம் அவர்கள் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்ற பெண்மை இயக்குநீரின் அளவில் குறைவு ஏற்படுவது தான். இந்த சமயத்தில் கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் அதிகரிக்கிறது. ரத்த கொழுப்பு அதிகரித்து ரத்த நாளங்கள் சுருங்கி பக்க வாதம், மாரடைப்பு போன்ற பிரச்சினை கள் தலைதூக்குகின்றன. தைராய்டு கோளாறுகளாலும் உடற்பருமன் உண்டாகிறது.

வாழ்க்கை முறை

வீட்டில் தொலைக்காட்சி, பகல் தூக்கம், சீதோஷணம் காரணமாக வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடத்தல், கவலைப்பட்டுக்கொண்டு பட்டினி கிடத்தல், சிறுகச்சிறுக நொறுக்குத் தீனி, என பல காரணங்களைச் சொல்லலாம். நீரிழிவு போன்ற நோய்களாலும் உடற்பருமன் உண்டாகிறது.

உடற்பயிற்சியின்மை

பருமனாக இருப்பவர்கள் உடற்பயிற்சியை மேற்கொண்டு எடையைக் குறைத்தால் இதய பாதிப்புகளை கணிசமாக தவிர்க்கலாம். இவர்கள் ஏரோபிக் பயிற்சி, நடப்பது, நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், கயிறு தாண்டுதல், ஓடுதல், குனிந்து நிமிர்ந்து ஏதாவது வேலை செய்தல் போன்ற பணிகளைச் செய்யலாம்.

இத்தகைய பயிற்சிகளால் உடல் எடை குறைவதோடு, இரத்தக் கொழுப்பின் அளவும், உடலில் உபரியாக தேக்கி வைக்கப்படுகிற கொலஸ்டிராலின் அளவும் குறையும். தமனிகளில் ஏற்படும் அடைப்பும் நீங்கும்.

இவ்வாறு செய்யாமல் அடுத்தடுத்து சாப்பிட்டு, வெறுமனே பொழுதைக் கழிக்கும்போது உடல் பருமன், பல வீனம் போன்றவை உண்டாகி இதயம் பாதிக்கப்படுகிறது.

உணவுப் பழக்கம்:

உடற்பருமனுக்கு உணவுப் பழக்கம் மிக முக்கியமான ஒன்று. இருந்தும் இதை ஏன் இறுதியாகக் கூறுகிறீர்கள் என நீங்கள் கேட்கலாம்.

பலர் ருசிக்காக, பொழுது போக்குக்காக துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மாமிச வகைகளை சாப்பிடுகிறார்கள். இவை இதயத்திற்கு தீங்கானவை என்பதை அறியாமலேயே:

உணவுப் பொருட்களை கொழுப்புச்சத்து உள்ளவை, நார்ச்சத்து உள்ளவை என இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்.

கொழுப்புச் சத்து உள்ள உணவுப்பொருட்களுள், மாமிசம், வறுத்த உணவு, எண்ணெய்ப் பொருட்கள், முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய் நீக்கப்படாத பால், பால் பொருட்கள், கிரிம்கள், இனிப்பு போன்றவை முக்கியமானவை. இவற்றை அதிகளவில் சாப்பிடும்போது தேவைக்கு அதிகமான கொழுப்புகள் சேர்த்துவைக்கப்பட்டு உடலின் அளவு பெரிதாகிறது.

நார்ச்சத்துப் பொருட்களில் இத்தகைய கொழுப்புச்சத்துக்கள் குறைவாகவே இருக்கும். தவிர இந்த நார்;ச்சத்துக்கள் போதுமான சக்தியைத் தவிர மற்றவற்றை வெளியேற்றி விடுகின்றன.

சரி, உணவுகளால் கொழுப்பு உண்டாகிறது என்கிறீர்களே, அது எவ்வாறு உண்டாகிறது? அது எப்படி இதயத்தை பாதிக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

நாம் உயிர் வாழவேண்டுமானால், ஆரோக்கியமாக செயல்பட வேண்டு மானால் கொலஸ்டிரால் என்ற கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இந்த கொலஸ்டிரால்லைபோ புரோட்டீன்களாக மாற்றப்பட்டு ரத்த நாளங்கள் வழியாக உடலின் மற்ற இடங்களுக்குக் கடத்தப்படுகிறது.

கொலஸ்டிராலை பல வழிகளில் உடலில் உள்ள ஈரல் உருவாக்கித் தருகிறது. அவற்றில் உணவின் பங்களிப்பு இருபது முதல் முப்பது விழுக்காடு. நமது உடம்புக்கு தேவையான சக்தி களில் 40% கொழுப்பு வடிவத்தில் இருக்கும். இந்த கொழுப்பில் அடர்த்தி அதிகமான கொழுப்பு (எச்.டி.எல்), அடர்த்தி குறைவான கொழுப்பு (எல்.டி.எல்.), மிககுறைவான அடர்த்தியுள்ள கொழுப்பு, மிக அடர்த்தி அதிகமான கொழுப்பு என நான்கு வகைகள் உள்ளன. இதில் பல உட்பிரிவுகளும் உள்ளன.

இவற்றை ஈரல் உண்டாக்கி பிற இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றன. லைப்போபுரோட்டீன்கள் மூலம் செல்லும் கொழுப்புக்கள் ரத்தத்தில் மிதந்து செல்லும். தேவையிருப்பின் சக்தியாக மாற்றப்பட்டு செலவாகும். இல்லாவிட்டால் அப்படியே கொழுப்பாக சேமித்து வைத்துக்கொள்ளும். அடர்த்தி அதிகமான கொழுப்பை நல்ல கொழுப்பு என்றும், அடர்த்தி குறைந்த கொழுப்பை கெட்ட கொழுப்பு என்றும் கூறுகிறோம்.

நல்ல கொழுப்பு அளவு குறைந்தாலும், கெட்ட கொழுப்பின் அளவு கூடினாலும் இதயம் பாதிக்கப்படும். இவை இரண்டுமே இருக்கவேண்டிய அளவுக்குக் கீழ் இருந்தாலும் பிரச்சினைதான்.

இன்னொரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள்

நமக்கு தினமும் சராசரியாக இரண்டாயிரம் கலோரி சத்து தேவை. அதிக மாக சாப்பிடும்போது இந்த அளவு கூடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உபரியான சத்துகள் க்ளைக்கோஜன், கொழுப்புச்சத்து என மாற்றப்பட்டு உடலில் அங்கங்கே சேமித்து வைக்கப்படுகிறது. இதனால் எடை கூடிவிடுகிறது.

எடை கூடினால் எப்போதும் பாரமான ஒரு பையை கழுத்தி கட்டி தொங்கவிட்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படி தேவையில்லாமல் உடல் பருமனை சுமக்கவேண்டியிருக்கும். தவிர இதயத்திற்கும் கூடுதலான வேலைப்பளு உண்டாகும். ரத்த அழுத்தம் கூடும். நுரையீரலுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களால் ரத்த நாளம் குறுக நேரிடும் போது இதய பாதிப்புகள் உண்டாகின்றன. உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றங்கள், புகைப்பழக்கத்தை கைவிடுதல் போன் றவை மூலம் உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்காக பட்டினி கிடத்தல், வேளை தவறி உண்ணுதல் போன்றவை பலனளிக்காது. ஒரு வேளை உணவு மறுத்து அடுத்த வேளை அதிகம் சாப்பிடுவதாலும், உணவை கட்ட நொறுக்குத் தீனிகளை உண்பதாலும் உடல் எடை அதிகரித்து இதய பாதிப்புகள் உண்டாகின்றன.

source : http://eegarai.darkbb.com/-f14/-t1023.htm

Wednesday, January 28, 2009

பார்சி இன மக்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

எனது குஜராத்தி நண்பர் ஒருவர் பார்சி இன மக்கள் இந்தியா வந்து சேர்ந்த கதை எனக்குக் கூறினார். அதில் ஒரு சிறந்த வாழ்க்கைப் பாடம் அடங்கி உள்ளது.

அதாவது, சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர், பார்சி இன மக்கள், தமது சொந்த மண்ணான பாரசீகத்தில் (ஈரான் ) இருந்து வெளியேற நேரிட்டது. அவர்கள், இந்தியாவில் அடைக்கலம் புகுவதற்காக கப்பலில் பயணம் செய்து , குஜராத் கரையோரம் இந்திய (குஜராத்)மன்னரிடம் அனுமதி கோரி காத்து இருந்தனர்.

அப்போது, குஜராத் மன்னர், தம் மண்ணில் ஏற்கனவே மக்கள் தொகை அதிகம் , மேலும் யாருக்கும் இடம் இல்லை என்று குறிப்பால் உணர்த்துவதற்காக ஒரு பால் நிறைந்த பாத்திரத்தை கப்பலுக்கு கொடுத்து அனுப்பினார்.

பார்சி மக்களோ , அப்பாத்திரத்தில் சிறிது சர்க்கரை இட்டு , மன்னருக்கே திருப்பி அனுப்பினார் .

அதன் குறிப்பானது . "நாங்கள் தனித்து தெரிய மாட்டோம் . பாரமாகவும் இருக்க மாட்டோம் . தங்களுடன் கலந்துவிடுவோம் . மேலும் தங்கள் வாழ்வுக்கும் சுவை கூட்டுவோம் ".


இந்த நூதனமான பதிலால் மகிழ்ச்சி அடைந்த மன்னர் , அவர்களை இந்தியாவிற்குள் (இந்திய கலாச்சாரத்தை பின் பற்ற வேண்டும் என்பது போன்ற சில நிபந்தனைகளுடன்) அனுமதித்தார்.


அன்று முதல் இன்று வரை, அம்மக்கள், இந்தியகலாச்சாரத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அதே சமயத்தில் தங்கள் தனித்துவத்தினையும் இழக்காமல் , வாழ்ந்து வருகின்றனர் .


அது மட்டுமல்ல. மிக சிறிய எண்ணிக்கையிலேயே இருந்தாலும் , இந்தியாவில் அவர்கள் பெருமளவிற்கு மதிக்கப் படும் ஒரு சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.


அணு சக்தி மேதை , ஹோமி பாபா , தொழில் அதிபர் டாடா ,பொருளாதார மேதை பெரோஸ் ஷா மேதா , ராணுவ தளபதி மனேக் ஷாச் போன்றோர் பார்சி இன மக்களே .


இதில் இருந்து நாம் கற்று கொள்ளவேண்டிய பாடம் என்ன?


இன்றைய தேதியில், பிறக்க ஒரு இடம் , பிழைக்க ஒரு இடம் என்பது வாழ்வியல் நியதி ஆகி விட்டது . அவ்வாறான சூழலில், நாம் வாழ வந்த பகுதியின் கலாச்சாரத்தினை மதித்து , மொழியினை (முடிந்த வரை) கற்றுக்கொண்டு, (அதே சமயத்தில் தங்கள் தனித்துவம் இழக்காமல்) அம் மக்களுடன் கலந்து வாழ்வோம் எனில் , பல பிரச்சினைகள் (உதாரணமாக தற்போதைய மராட்டியர் - வட இந்தியர் பிரச்சினை) தவிர்க்கப் படும்.

Source : http://sandhainilavaram.blogspot.com/2008/10/blog-post_13.html

எளியோரையும் மதிப்போம் !

  சமீபத்தில் ஒரு சிறு கதையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, ஒரு ஏழைச் சிறுவன் ஒரு பெரிய ஐஸ்க்ரீம் பார்லருக்கு செல்கிறான். அங்கு இருக்கும் ஒரு வெய்ட்டரிடம் ஒரு பிஸ்தா ஐஸ்க்ரீம் விலை கேட்கிறான். ஒரு குறிப்பிட்ட விலையை வெய்ட்டர் சொன்னதும் தன்னிடமுள்ள சிறு பையில் உள்ள காசுகளை எண்ணி பார்க்கிறான். பின்னர், இதை விட குறைவாக விலை உள்ள ஐஸ்க்ரீம் வேண்டும் எனவும் அதன் விலை என்ன என்றும் கேட்கிறான். வெய்ட்டருக்கு மிக எரிச்சல். மிகப் பெரிய கஸ்டமர்கள் காத்து கொண்டிருகிறார்கள். இந்த சிறு பையன் தனது நேரத்தை வீணடிக்கிறானே என்று.



ஒரு வழியாக , அந்த பையனின் அடக்க விலையில் ஒரு ஐஸ்க்ரீம் கிடைக்கிறது. விட்டது தொல்லை என்று எண்ணும் வெய்ட்ட்ர் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு விட்டு அந்த பையன் சென்ற பிறகு அவனுடைய தட்டைப் பார்க்கிறார். அதில் ஐஸ்க்ரீம் விலையோடு அவருக்கான டிப்சும் இருக்கிறது. அந்த பையனிடம் இருந்த தொகையை கொண்டு அவனால் பிஸ்தா ஐஸ்கரிமே வாங்கி இருக்க முடியும் என்றாலும் கூட, வேயட்டருக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கதினாலேயே அந்த பையன் குறைந்த விலையில் உள்ள ஐஸ்க்ரீம் வாங்கி இருக்கிறான் என்று அவர் புரிந்து கொள்கிறார்.

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் எனும் கருத்தினை கொண்ட இந்த கதை எனக்கும் கூட சில உண்மைகளை புரிய வைத்தது.

கொஞ்சம் யோசித்து பாருங்கள். பளபளக்கும் சூப்பர்/ஹைபெர் மார்கெட்டுகளில் மில்லி கிராம் தப்பாமல் எவ்வளவு பில் போட்டாலும் ஒன்றும் பேசாமல் பணம் நீட்டும் நாம் சந்தையில் இரண்டு ரூபாய்க்கு பேரம் பேசினாலும் கூட, நம்முடன் வந்திருக்கும் குழந்தையிடம் ஐந்து ரூபாய் மதிப்புள்ள பழத்தை அன்பாக (இலவசமாக) திணிக்கும் சிறு வியாபாரிகள்.

காரில் ஏற்படும் சிறு தொந்தரவுக்காக விசிடிங் சார்ஜ், இன்ஸ்பெக்சன் சார்ஜ், செக்கிங் சார்ஜ் (மனிதர் செய்யும் செக்கிங் இல்லாமல் கம்ப்யூட்டர் செக்கிங் வேறு) என்று கத்தியினை நமது பாக்கெட்டுக்கும் கழுத்துக்கும் வைக்கும் சர்விஸ் சென்டர்களுக்கு நடுவே வியர்க்க விறுவிறுக்க காரினை செக் செய்து, அதில் ஒரு பிரச்சினையும் இல்லை என்றால் பணம் வாங்க தயங்கும் (சில சமயங்களில் மறுக்கும்) கார் மெக்கானிக்குகள்.

இது மட்டுமல்ல, உறவினருக்காக மருத்துவமனையில் கவலையுடன் காத்திருக்கும் போது, கவலைபடாதீங்க, ஒண்ணும் ஆகாது என்று அன்பாக ஆறுதல் கூறும் (சிறு) மருத்துவமனை ஊழியர்கள்.

சிலரின் அகராதியில் பிழைக்க தெரியாதவர்கள் என்று பெயர் பெற்ற இவர்களுக்கு எத்தனை முறை நாம் ஒரு சக மனிதருக்கான மரியாதை கொடுத்திருக்கிறோம்? எத்தனை முறை அவர்களை நேருக்கு நேராக பார்த்து பேசி அவர்களின் அன்புக்கும் பெருந்தன்மைக்கும் மதிப்பு கொடுத்திருக்கிறோம்?

பணமும் பகட்டும் முக்கியம் அல்ல. மனமும் அதில் உள்ள நல்ல குணங்களுமே முக்கியம் என்றும் கதைகளின் உதவி இல்லாமலேயே நமக்கு உணர வைக்கும் இத்தகைய எளியோர் மன்னிக்கவும் இத்தகைய பெரியோரையும் மதிப்போமே.

Source : http://sandhainilavaram.blogspot.com/2008/11/blog-post_05.html

இது ஒரு (வாழ்க்கை) சமையல் குறிப்பு -copied

மூன்று சம அளவு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். மூன்றிலும் நீரை ஊற்றுங்கள். ஒரு பாத்திரத்தில் கேரட், இன்னொரு பாத்திரத்தில் முட்டை மற்றும் கடைசி பாத்திரத்தில் கொஞ்சம் காஃபி பொடி போடுங்கள். அனைத்து பாத்திரங்களையும் சுமார் பதினைந்து நிமிடங்கள் சூடு படுத்துங்கள். என்னடா இது? புது வகை சமையல் குறிப்பாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இதில் ஒரு சுவையான வாழ்க்கை தத்துவம் அடங்கி உள்ளது.

எல்லா மனிதர்களுக்கும் வாழ்க்கை பாதை எப்போதுமே எளிமையானதாகவும் சந்தோசமானதாகவும் அமைந்து விடுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் கடும் போட்டிகளையும், சில சமயங்களில் பயங்கர விரோதங்களையும் கூட சந்திக்க வேண்டி இருக்கிறது. உதாரணமாக, புதிய அலுவலகம், புதிய தொழில், புதிய உறவுகள் மற்றும் புதிய இருப்பிடங்களில் ஏற்படும் சில கசப்பான அனுபவங்கள். இத்தகைய கடினமான சூழல்களில் நாம் கொதி நீரில் வீழ்ந்து கிடப்பது போல துடித்துப் போகிறோம். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களையும் அவற்றை ஏற்படுத்தும் சுற்றத்தாரையும் (சமூகம்) ஒவ்வொருவரும் மூன்று வகையாக எதிர்கொள்ளலாம்.

முதல் வகையானவர்கள் கேரட் போன்றவர்கள். இவர்கள் சுற்றத்தாருடன் போராடி பிரச்சினைகளைத் தீர்த்து விடலாம் என்று எண்ணும் கடினமான இறுக்கமான மனதுடையவர்கள். ஆனால் சுற்றம் (சமூகம்) இவர்களை விட மிகவும் பெரியது . அவற்றில் உள்ள பிரச்சினைகளும் மிகவும் வலிமையானவை. எனவே அந்த பிரச்சினைகள் பெரும்பாலும் இவர்களைத் தீர்த்து விடுகின்றன. தொடர்ந்து போராடுவதன் மூலம் இவர்கள் துவண்டு போய் விடுகிறார்கள். இறுதியாக உறுதி குலைந்து தோல்வியில் துவண்டு போய் விடுகிறார்கள்.

இரண்டாம் வகை முட்டை போன்றவர்கள். இவர்கள், ஏதோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு போய் காலத்தை தள்ளி விடலாம் என்று எண்ணும் வழவழ கொளகொள ஆசாமிகள். சுற்றத்தாரை இளகிய மனதுடன் எதிர் கொள்கிறார்கள். ஆனால், பிரச்சினைகளை தீர்க்க இளகின மனது மட்டும் போதாது. பிரச்சினைகளை சரிவர புரிந்து கொள்ளும் திறமை வேண்டும். பெரும்பாலும் சுற்றத்தார் இவர்களது இளகிய மனதை சரிவர புரிந்து கொள்வதில்லை. மாறாக தொடர்ந்து வரும் பிரச்சினைகள் இவர்கள் மனதை இறுக்கி விடுகின்றன. இறுதியாக உலகத்தைக் குறை கூறுபவர்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள்.

மூன்றாம் வகையினர் காஃபி பொடி போன்றவர்கள். இவர்கள் ஆளுமை குணம் மிக்கவர்கள். சுற்றத்தார் இவர்களின் சொந்த குணத்தை மாற்ற இவர்கள் அனுமதிப்பதில்லை. பிரச்சினைகளின் சந்திக்கும் போது இவர்கள் தன் ஆளுமைத் திறத்தை வெளிப் படுத்துகிறார்கள் (மணம் வீசுகிறார்கள்). சுற்றுப் புற சூழ்நிலையை இவர்கள் (விரும்பும்) குணத்திற்கு மாற்றுகிறார்கள். சுற்றத்தைப் (சமூகத்தை) புரிந்து கொண்டு அதோடு கலந்து வாழ்ந்து, வாழும் சூழலையே இவர்கள் மணம் வீச செய்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்?

ஒரு கப் காஃபி குடித்துக் கொண்டே யோசியுங்கள்.

Source :  http://sandhainilavaram.blogspot.com/2008/12/blog-post_17.html

Friday, December 19, 2008

பொது WiFi-க்களில் (Public WiFi Access) Careful!

கோடைகால இளவெயிலில் நீண்டதொரு தூண்டிலை வைத்துக்கொண்டு மீன்பிடி ஆர்வலர்கள் மணிக்கணக்கில் கரையோர திண்டுகளில் அமர்ந்து கொண்டு மீன்பிடித்துக் கொண்டிருப்பார்கள். இதெல்லாம் என்ன பொழுதுபோக்கு இதிலென்ன மகிழ்ச்சி கிடைக்கின்றது என யோசித்ததுண்டு.

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பக்கமோ அல்லது அப்பார்ட்மெண்டுகளின் பக்கமோ கோபால் கொஞ்ச நேரம் சும்மா இருக்க நேரம் கிடைத்தாலும் சும்மா இருக்கமாட்டான். தனது மடிக்கணிணியை திறந்து பக்கத்தில் ஏதாவது பாதுகாக்கப்படாத திறந்த வைஃபை(wifi) சிக்காதாவென தேடுவான். மன்ஹாட்டனில் தூண்டில் போட்டால் அவை எளிதாய் சிக்கும்.

இதெல்லாம் பழையகதை. இப்பொழுது அவன் கம்பெனியிலிருந்து ஒரு Sierra Wireless aircard கொடுத்திருக்கின்றார்கள். மடிக்கணிணியின் ExpressCard slot-ல் அதைச் செருகிக்கொண்டால் நடுக்காட்டிலும் அவனுக்கு இணைய இணைப்பு கிடைக்கின்றது. நான் இன்னும் ஸ்டார்பக்ஸ் காஃபிகடை, டீக்கடை, ஆங்காங்கே இருக்கும் துரித உணவுக்கடைகளின் இலவச வைஃபை-க்களையே நம்பியிருக்கின்றேன்.

எனினும் இந்த இலவச wifi-க்களில் அல்லது எங்காவது சிக்கும் பாதுகாக்கப்படாத திறந்த வைஃபைக்களை பயன்படுத்துவதிலுள்ள அபாயம் எனக்கு தெரியாமலில்லை. அப்பொழுது நாம் நமது முழு இணைய தகவல்தொடர்பையும் இது போன்ற ஏதோ ஒரு நபரின் இணைய இணைப்பு வழியாய் நடாத்துகின்றோம். அந்த நபரோ நமக்கு தெரியாமல் இடையில் ஒரு கருவியினை வைத்து நாம் நடாத்திய தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகளையெல்லாம் இரகசியமாய் பதிவு செய்துவைத்துக் கொண்டு பின்பு பொறுமையாக அமர்ந்து அப்பொட்டலங்களை பிரித்துபார்த்தால் என் கிரெடிட்கார்டு தகவல்கள் அல்லது பாஸ்வேர்டுகள் அல்லது நான் அட்டாச் செய்து அனுப்பிய ரகசிய ஆவணங்கள் எல்லாம் அம்பேல் ஆகிப் போயிருக்கும்.

இதனாலேயே பொது வைஃபைக்களில் என் மடிக்கணிணியையோ ஐபோனையோ இணைக்கும் போது மேலோட்டமாக டைம்பாஸ் இணைய உலா வருவதுண்டு.ஜிமெயிலில் கூட நுழைய விரும்புவதில்லை.http வழியாக செல்லும் போது ஜிமெயிலின் பாஸ்வேர்ட் மட்டுமே என்கிரிப்ட் செய்யப்பட்டு அனுப்பப்பட்டாலும் உள்தகவல்கள் என்கிரிப்ட் செய்யப்படுவதில்லை என்பது நினைவிருக்கட்டும். http-க்கு பதிலாக https ஜிமெயிலில் பயன்படுத்தினால் உங்கள் முழு ஜிமெயில் சேவையும் என்கிரிப்ட் செய்யப்பட்டிருக்கும்.

இதுபோன்ற பொது வைஃபைக்களிலும் இணைந்து நிம்மதியாக இணைய உலா வர Hotspot Shield அல்லது AlwaysVPNபோன்ற மென்பொருள்களை பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் தகவல் பொட்டலங்களில் போக்குவரத்துகள் முழமையாக சங்கேதமொழியில் (VPN encryption) நடப்பதால் இடையில் எதாவது மோப்பமென்பொருட்கள் யாராவது வைத்து இருந்தாலும் அவற்றால் புரிந்துகொள்ள இயலாது. வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இவற்றின் தேவை இல்லாமலிருக்கலாம். ஆனால் பொதுஇடங்களில் இப்பாதுகாப்பு மென்னுறைகளை பயன்படுத்துதல் மிகவும் நல்லது.

இன்னொரு சின்ன லாபம்:
நீங்கள் எந்த நாட்டிலிருந்தாலும் Hotspot Shield வழி நீங்கள் இணையத்தில் இணையும் போது உங்களுக்கு அமெரிக்க ஐபி விலாசம் கொடுக்கப்படுவதால் உங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட தளங்கள் திறந்துகொள்வதோடு அரபுநாடுகளிலிருந்து இது வழியாக தடைசெய்யப்பட்ட VOIP அழைப்புகளும் செய்யலாம் என கேள்விப்பட்டேன்.

ஆனால் ஒரு சின்ன எச்சரிக்கை:
இம்மென்பொருள்கள் உங்கள் தகவல் பொட்டலங்களின் போக்குவரத்துகளை Hotspot Shield அல்லது AlwaysVPN நிறுவன செர்வர்களின் வழி செலுத்துவதால் நீங்கள் இந்நிறுவனங்களில் முழு நம்பிக்கை கொண்டிருக்கவேண்டுமாக்கும்





Source : http://pkp.blogspot.com/2008/12/wifi.html

Friday, December 5, 2008

விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்

விலங்குகளின் வினோத குணங்கள்: எறும்புகள்




உங்களுக்கு தெரியுமா எறும்புகள் கட்டும் ராமர் சேது பாலம்: அடர்ந்த அமேசான் காடுகளில் உள்ள இந்த எறும்பினங்கள் கட்டும் பாலம் அதன் மூலம் ஏரி அல்லது ஆறுகளை கடக்கும் விதம், கடக்கும் போது எதிர்படும் அபாயகரமான சூழல்களை தாண்டி செல்லும் விதம், ராணி எறும்பினை பாதுகாக்கும் முறை ....கண்டிப்பாக கண்கள் பனிக்கும்.

வீடியோ வை காண இங்கே சொடுக்கவும்..

Monday, December 1, 2008

வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் !!


வன்முறையின் வித்துகளும் விழுதுகளும் :
சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த வன்முறையும், அதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களையும் பார்த்து மிஸ்டர் மிடில் கிளாஸ் பொதுஜனம், ரொம்பவே அதிர்ச்சி அடைந்திருக்கிறது. காரணம், தமிழகத்தில் நடப்பது ஜனநாயகம் என்றும், எல்லாமே சரியாகத் தான் இருக்கிறது என்றும் நம்பிக் கொண்டிருப்பது தான். என்ன… இந்த மின்வெட்டால் தான் கொஞ்சம் பிரச்னை; மற்றபடி எல்லாமே இன்ப மயம்!
- இப்படி ஒரு கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே சட்டக் கல்லூரி சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்க முடியும். ஆனால், நாட்டு நடப்பை உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு இது அதிர்ச்சியை அளித்திருக்காது. ஒரு உதாரணம்: திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ரெட்டணை என்ற கிராமத்தில் ஒரு போராட்டம் நடந்தது. என்ன போராட்டம் என்றால், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளிகளுக்கு அரசாங்கம் ஒருநாள் கூலியாக 80 ரூபாய் என்று நிர்ணயித்திருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளோ, ‘40 ரூபாய் தான் கொடுப்போம்’ என்று சொல்ல, தொழிலாளர்கள், ‘வேலை செய்ய மாட்டோம்’ என்று தர்ணா செய்தனர். உடனே போலீஸ் வந்தது. தர்ணா செய்த தொழிலாளிகளைக் கண்மண் தெரியாமல் தடியால் அடித்து நொறுக்கியது. பல தொழிலாளர்களின் மண்டை உடைந்தது.
ஒரு நாள் பூராவும் உடல் உழைப்பில் ஈடுபட்டால் அதற்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கூலி 80 ரூபாய். அதிலும், அதிகாரிகள் தருவது 40 ரூபாய்; எதிர்த்துக் கேட்டால் போலீசை விட்டு அடிப்பர். இந்தச் செய்தியும் தினசரிகளில் புகைப்படத்துடன் தான் வந்திருந்தது. ஆனால், இது நம்மில் யாரிடமும் ஒருவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. கிராமத்துக்கும், நகரத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தீர்களா? அங்கே 40 ரூபாய் ஒருநாள் கூலி; இங்கே காபி ஷாப்பில், ஒரு காபி விலை 40 ரூபாய். இப்படிப்பட்ட அதல பாதாள வித்தியாசம், இந்த உலகில் எந்த நாட்டிலுமே இல்லை என்று சொல்வேன். மீண்டும் சட்டக் கல்லூரி சம்பவத்துக்கு வருவோம்… அங்கே நடந்தது, நம் சமூகத்தில் நிலவும் ஜாதிக் கொடுமையின், ஜாதி ஒடுக்குமுறையின் ஒரு விபரீத விளைவு தான். இன்றும் சில கிராமங்களில் தலித்துகள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை.
அப்படி நுழைந்தால் கலெக்டர் முன்னிலையில் தான் நுழைய வேண்டியிருக்கிறது. அதுவும் 100 பேர் நுழைவதாக இருந்தால், 500 பேர் கொண்ட போலீஸ் படை பாதுகாப்பு. ஒரு தலித், கோவிலுக்குள் நுழைந்தால், அது ஒரு பெரிய அதிசய செய்தி என்ற அளவில் இருக்கிறது நம் நாடு. மேல வளவுவில் நடந்த கதையும் நமக்குத் தெரியும். ஒரு தலித் ஊராட்சித் தலைவராகி விட்டார் என்பதற்காக, அவரது தலையை வெட்டி உருட்டி விட்டனர். இத்தகைய வன்முறையின் ஒரு வெளிப்பாடு தான் சட்டக் கல்லூரி சம்பவம். இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, கிராமங்களில் ஜாதிரீதியான ஒடுக்குமுறை நிலவுவதைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் முதலில் நிறுத்த வேண்டும். கல்லூரிகளிலும் ஜாதி ரீதியான விடுதிகள் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் குறுக்கீடு இருக்கக் கூடாது. இப்படிப் பலவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
உதாரணமாக, ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் ஏன் இது போன்ற ஜாதிக் கலவரங்களும், வன்முறைச் சம்பவங்களும் நடப்பதில்லை? இதே போன்ற நிர்வாக முறையை சட்டக் கல்லூரிகளிலும் கொண்டு வர வேண்டும். இதேபோல், சென்னையில் மற்றொரு தனியார் கல்லூரியில் ஒரு வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. இரவு உணவில் மாட்டுக் கறியைச் சேர்த்து விட்டனர் என்பதைக் காரண மாக வைத்து, பெரும் கலவரம் நடந்துள்ளது. தமிழக மாணவர்கள் மாட்டுக் கறிக்கு ஆதரவு; வட மாநில மாணவர்கள் எதிர்ப்பு. தமிழக மாணவர்களை வட மாநில மாணவர்கள் ஆயுதங்களால் தாக்கி விட்டனர்; இதுவும் கிட்டத்தட்ட ஜாதிக் கலவரத்தை ஒத்தது தான். மாட்டுக் கறி உண்பவர்கள் சமூகத்தின் கீழ்த்தட்டில் இருப்பவர்; அதை எதிர்க்கும் வட மாநிலத்தவர் மேல் தட்டு. எந்தத் துறையையும் தனியார் வசம் விட்டால் அது அரசுத் துறையை விட மேம்பட்டதாக இருக்கும் என்று ஒரு கட்டுக் கதை நிலவுகிறது. கலவரம் நடந்த அந்தக் கல்லூரி தனியார் கல்லூரி தான். மேலும், பல கல்லூரி நிர்வாகங்கள் வட மாநில மாணவர்களை ஒரு விதமாகவும், தமிழக மாணவர்களை அவர்களைவிடத் தாழ்வாகவும் நடத்துகின்றனர் என்பது மாணவர்களிடையே நிலவும் குற்றச்சாட்டு.
சட்டக் கல்லூரி சம்பவத்தில் திருவாளர் பொதுஜனம் அதிர்ச்சி அடைந்த மற்றொரு விஷயம், அந்தக் கொலைபாதகச் செயலை போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது தான். இதற்கு நாம் குற்றம் சொல்ல வேண்டியது போலீஸ்காரர்களை அல்ல; அரசியல்வாதிகளைத் தான். காவல் துறை என்பது தமிழக ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளின் ஏவல் துறையாக மாறி, வெகுகாலம் ஆகிவிட்டது. காரணம், ஆளுகிற அரசியல்வாதி நினைத்தால் போலீசை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்தத் தண்ணியில்லாக் காட்டுக்கு வேண்டுமானாலும் மாற்றலாம். போஸ்டிங்கே போடாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கலாம். கிட்டத்தட்ட போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் எடுபிடிகளைப் போல் தான் ஆக்கப்பட்டு விட்டனர். உதாரணமாக, ஒரு அரசியல்வாதி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப் பட்டால், அவருக்கு மலர்மாலை போட எத்தனை போலீஸ் அதிகாரிகள் யூனிபார்முடன் கியூவில் நிற்கின்றனர் என்று நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். ஏன் இப்படி… எந்த அதிகாரி அதிகமாக காக்கா பிடிக்கிறாரோ, அந்த அதிகாரிக்கே, ‘நல்ல’ துறை கிடைக்கும். இந்த, ‘நல்ல’ என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சில போலீஸ் அதிகாரிகள் முதல்வரின் காலில் விழுவதைக் கூட பார்க்கிறோம்.
வேறொரு கால கட்டத்துக்குச் செல்வோம்… காமராஜர் முதல்வராக இருந்த நேரம். கக்கன் போலீஸ் அமைச்சர். அப்போது நேரு தமிழகத்திற்கு வருகிறார். அந்த விழாவில் கலந்துகொள்ள அந்த ஊருக்கு கக்கனும் செல்கிறார். ரயில் நிலையத்தில் நேருவை வரவேற்க வேண்டும். கக்கனின் காரை ஒரு போலீஸ்காரர் நிறுத்தி விடுகிறார். ஏனென்றால் அந்தக் காரில் வழக்கமான சிவப்பு விளக்கு இல்லை. வருபவர் அமைச்சர், அதுவும் போலீஸ் அமைச்சர் என்பது போலீஸ்காரருக்குத் தெரியாது. ”பிரதமர் வருகிறார், அதனால் காரை இதற்கு மேல் உள்ளே விட முடியாது” என்கிறார் போலீஸ்காரர். உடனே, காரிலிருந்து கக்கன் இறங்கி, விடுவிடு என்று ரயில் நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றிருக்கிறார். அந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் இரண்டு பர்லாங் தூரம். அப்போது கக்கன் சொன்னார், ”அந்தப் போலீஸ்காரர் அவருடைய கடமையைத் தானே செய்கிறார்? சிவப்புச் சுழல் விளக்கு இல்லாமல் வந்தது நம்முடைய தவறு தானே?”
இப்போது இப்படி நடக்குமா… நடந்திருந்தால் அந்தப் போலீஸ்காரரின் நிலைமை என்ன ஆகும்? எப்போதோ, ஒருநாள் மயிலாப்பூரில் நடந்து வந்து கொண்டிருந்தேன். அந்த இடமே ஊரடங்கு உத்தரவு போட்ட மாதிரி இருந்தது… ஒரே போலீஸ் மயம். பார்த்தால், பாரதிய வித்யா பவனுக்கு முதல்வர் வருகிறாராம். அதனால் தான் ஆரம்பத்தில் சொன்னேன்… இங்கே நடப்பது ஜனநாயகம் அல்ல என்று. அமெரிக்காவில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அவரது மகள் சாலை விதிகளை மீறி விட்டார் என்று அவரது டிரைவிங் லைசென்ஸ் பறிக்கப்பட்டது. இதுபோல், தமிழகத்தில் நடக்க முடியுமானால், அப்போது தான் இதை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியும். அதுவரைப் போலீஸ்காரர்கள், மேலிடத்திலிருந்து உத்தரவு வருகிறதா என்று கைப்பேசி அழைப்புக்காக காத்துகொண்டு தான் இருப்பர்; கண் முன்னே ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொண்டிருந்தாலும்… மொத்தத்தில் சொல்லப் போனால், சமூக அளவில் - இப்போதைக்கு ஜாதியை ஒழிக்க முடியாது என்று தோன்றுகிறது; அதுவரை ஒவ்வொரு ஜாதியையும் மற்றொரு ஜாதி சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். அரசியலைப் பொறுத்தமட்டில், போலீஸ், கல்வி, நீதிமன்றம் போன்ற மிக அடிப்படையான துறைகள், அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டதாகவும், சுதந்திரமாகவும் செயல்பட வேண்டும். அப்போது தான் நம்மால் நல்லதொரு சமூகச் சூழ்நிலையை உருவாக்க முடியும்.
-சாரு நிவேதிதா
எழுத்தாளர், விமர்சகர்
நன்றி: தினமலர்